Saturday, March 16, 2013

ரயில்வேதுறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருவது வருடம் பின்தங்கிய தமிழகம்


 



     கடந்த இருபது வருடங்களாக ரயில் பட்ஜெட்டில் கேரளம் ஜொலித்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு ரயில்வே துறை வளர்ச்சியில் கேரளத்தை விட இருபது வருடம் பின்தங்கி காணப்படுகிறதுது. சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் என ஆறு கோட்டங்கள் உள்ளன. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில்வழி தடங்களை உள்ளடக்கிய பகுதிகளை கொண்டது தெற்கு ரயில்வே மண்டலம் ஆகும். கேரள மாநிலம் 3.34 கோடி மக்கள் தொகையும் 38,863 சதுர கி.மீ மொத்த பரப்பளவும் 1050 கி.மீ ரயில் இருப்புபாதை ரயில் வழி தடமும் இரண்டு ரயில்வே கோட்டங்கள் கொண்ட கேரளாவுக்கு ஓவ்வொரு ரயில் பட்ஜெட்டிலும் கணிசமான அளவுக்கு ரயில்கள் மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை கடந்த இருபது ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இது மட்டும் இல்லாமல் கணிசமான அளவு தமிழக ரயில்களை கேரளாவுக்கு நீட்டிப்பு என்ற பெயரில் கேரளாவில் உள்ள பகுதிகளுக்கு நீட்டிப்பு கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்தும் வருகிறது.


      கடந்த மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கேரளாவுக்கு மிக குறைந்த ரயில்களே அறிவிக்கப்பட்டன என்று அங்கு உள்ள எம்.பிக்கள் போராடி கேரளாவுக்கு என தனி ரயில்கள் அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றனர். இது அவர்கள் அவர்கள் மாநில ரயில்வேதுறை வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது புலனாகும். பெப்ரவரி மாதம் தாக்கல் செய்த ரயில் பட்ஜெட்டில் கேரளாவுக்கு பெங்களுர் - மங்களுர் வாராந்திர ரயில், கொச்சுவேலி – மும்பை வாராந்திர ரயில், கொல்லம் - விசாகப்பட்டிணம் வாராந்திர ரயில், மங்களுர் - காச்சிகுடா வாராந்திர ரயில், புலனூர் - கொல்லம் பயணிகள் ரயில், சொர்னூர் - கோழிக்கோடு பயணிகள் ரயில், திருச்சூர் - குருவாயூர் பயணிகள் ரயில், எர்ணாகுளம் - ஹெளகாத்தி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு, கொல்லம் - மதுரை ரயில் புலனூர் வரை நீட்டிப்பு என ரயில்கள் அறிவிக்கப்ட்டன.


     பட்ஜெட்டில் கேரளா புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கேரளாவில் உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் அனைவரும் அன்றே இரவு டில்லியில் தனியாக கூட்டம் கூடி கேரளாவுக்கு ரயில் பட்ஜெட்டில் புறக்கணிப்பு பற்றி விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுத்தனர். இந்த கூட்டத்தின் முடிவின் படி பட்ஜெட்டில் ரயில் அறிவிப்புகள் போதாது என்று கேரளாவில் உள்ள எம்.பிக்கள் கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து இராணுவ அமைச்சர் அந்தோணியின் தலைமையில் கேரளா எம்.பிக்கள், கேரளாவில் உள்ள மத்திய அமைச்சர்கள் என அனைவரும் குழுவாக சென்று ரயில் பட்ஜெட்டில் கேரளா புறக்கணிக்கப்ட்டுள்ளது என்று கூறி ரயில்வே அமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களை நேரடியாக சென்று ரயில் பட்ஜெட்டில் கேரளம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் எதிர்பார்க்கும் ரயில்களின் பட்டியல் கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்கள் மனு அளித்தது மட்டும் இல்லாமல் அங்கு உள்ள மாநில் முதல்வரும் அந்த மாநிலத்தில் உள்ள கோரிக்கை பட்டியலை ரயி;ல்வே அமைச்சகத்துக்கு நேரடியாக கொண்டு சென்று சமர்பிக்கிறார்.

     இவர்கள் அனைவரும் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக ரயில்வே அமைச்சர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் கேரளாவுக்கு என தனியாக புதிய ரயில்களை அறிவித்தார்கள். திருவனந்தபுரம் -புதுடில்லி வாராந்திர ரயில், எர்ணாகுளம் - கொல்லம் மெமு ரயில், எர்ணாகுளம் - கொல்லம் மெமு வழி ஆலப்புளா, முதலில் அறிவித்த கொச்சுவேலி – மும்பை வாராந்திர ரயில் வாரத்துக்கு இரண்டு நாள் ரயிலாகவும், பெங்களுர் - மங்களுர் வாராந்திர ரயில் வாரத்துக்கு இரண்டு நாள் ரயிலாகவும், திருவனந்தபுரம் - கோழிக்கோடு ஜனசதாப்தி ரயில் கண்ணூர் வரை நீட்டிப்பு, முதலில் அறிவித்த சொர்னூர் - கோழிக்கோடு பயணிகள் ரயில் திருச்சூர் வரை நீட்டிப்பு என இவ்வளவு ரயில்கள் அறிவிக்கப்ட்டது.

     கேரளாவைவிட மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் மூன்று மடங்கு பெரிய மாநிலமான தமிழகத்தில் கேரளாவில் உள்ள ரயில்களின் அறிவிப்பை ஒப்பிடும் போது தமிழகம் எந்த அளவு ரயில்வே துறையால் பின்தங்கி உள்ளது என்ற புரியும். பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என அறிவிக்கப்படும் ரயில்கள் சென்னையிலிருந்து வடஇந்திய நகரங்களுக்கு பல்வேறு ரயில்கள் அறிவிக்கபட்டு இயக்கபட்டு வருகிறது. சென்னை தமிழகத்தின் ஆந்திர மாநிலத்தின் அருகில் ஓர் ஓரத்தில் உள்ளது. சென்னையிலிருந்து இயக்கபடும் ரயில்கள் வெறும் 60கி.மீ தூரம் மட்டுமே தமிழக எல்லையில் பயணிக்கிறது. ரயில்வேதுறை மாநிலத்தின் ஓர் எல்லையில் உள்ள சென்னைக்கு ரயில்களை இயக்கிவிட்டு தமிழகத்துக்கு இவ்வளவு ரயில்கள் இயக்கபட்டுள்ளது என கணக்கு காட்டப்படுகிறது. சென்னையிலிருந்து புறப்பட்டால் தமிழக எல்லைக்குள் அடுத்து எந்த ஒரு நிறுத்தமும் இருக்காது. தமிழகத்தின் எல்லை தெற்கே 700கி.மீ தூரம் கன்னியாகுமரி வரையிலும் மேற்கே கோவை வரையிலும் மற்ற ரயில்வழிதட பகுதிகளாக நாகை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகள் வரை உள்ளது. சென்னையிலிருந்து இயக்கபடும் ரயில்களை தென்மாநில பயணிகளின் நலன் கருதி தென்மாவட்ட நகரங்களுக்கு நீட்டிப்பு செய்ய தமிழக எம்.பிக்கள் முயற்சி செய்ய வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது மட்டும் இல்லாமல் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து ஓர் ரயில் அறிவிக்கப்ட்டால் அந்த ரயில் கேரளாவில் உள்ள அனைத்து மாநில பயணிகளுக்கும் பயன்படும் விதமாக இயக்கப்படுகிறது. இவ்வாறு கேரளாவில் உள்ளதை போன்று தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்கள் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியிலிருந்து மதுரை, சென்னை வழியாக இயக்கினால் தமிழக மாநில எல்லைக்குள் அதிக தூரம் பயணிக்கும் ரயிலாக இருக்கும். இவ்வாறு அறிவித்து இயக்கினால் மட்டுமே இது போன்ற ரயில்களால் தமிழக பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

     தென்தமிழ்நாட்டு பகுதிகளிலிருந்து வட இந்திய அனைத்து நகரங்களுக்கு நேரடியாக ரயில் வசதி தற்போது இல்லை. தென்தமிழ்நாட்டில் உள்ள பயணிகள் வட இந்திய அனைத்து நகரங்களுக்கு செல்ல வேண்டுமனால் தென்மாவட்டத்திலிருந்து எதாவது ஓரு ரயிலில் சென்னை எழும்பூர் சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து சென்னை சென்ட்ரல் சென்று பகல் முழுவதும் சென்னையில் சென்ட்ரலில் பொழுதை கழித்துவிட்டு மாலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் வட இந்திய அனைத்து நகரங்களுக்கு இயக்கப்படுட் ரயிலில் புறப்படவேண்டும். இவ்வாறு செல்வதால் குடும்பத்துடன் லக்கேஜ் கொண்டு; செல்பவர்கள் அவஸ்தை சொல்லி மாளாது. இவ்வாறு தங்கி செல்வதற்கு அதிக பயணநேரமும், பணவிரயமும் கூடவே மனஉழச்சலும் ஆழாக்கப்படுகின்றனர் என்ற உண்மை ஏன் இந்த ரயில்வே துறை அதிகாரிகளுக்கும் தமிழக எம்.பிகளுக்கும் தெரியாமல் போனது என்பது ஆச்சரியமாக உள்ளது.

     கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் முதல் காசரகோடு வரை உள்ள ரயில்பாதைகளில் சுமார் 80 சதவிகிதம் இருவழி பாதையாகவும் மின்சாரபாதையாகவும் மாற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள ரயில் பாதைகளும் பணிகள் விரைவாக நடைபெற்று பணிகள் 2015க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிதியை அங்குள்ள எம்.பிக்ள் பெற்று விட்டனர். ஆனால் தமிழகத்திலே கேரளாவுக்கு எதிர்மறையாக தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி – சென்னை பாதையை இருவழிபாதையாக மாற்றும் திட்டத்துக்கு 20 சதவிகம் தூரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 80 சதவிகித தூரம் ஒருவழி பாதையாகவே உள்ளது. இதிலும் கன்னியாகுமரி – மதுரை 240 கி.மீ தூரம் அனுமதிக்கபடாத திட்டம் ஆகும். இந்த திட்ங்கள் அனைத்தும் 2025-ம் ஆண்டிலாவது நிறைவு பெறுமா என்பது சந்தேகமே.

     கேரளாவில் உள்ள எம்.பிக்கள் திருவனந்தபுரத்திலிருந்து அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு கேரளத்துக்கு அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என்ற தொலைதூர கண்னோட்டத்துடன் திருவனந்தபுரத்தின் அருகில் உள்ள நேமம் ரயில் நலையத்தில் 250கோடி மதிப்பீட்டில் பத்து பிட்லைன்கள் வசதியுடன் கூடிய புதிய ரயில் முனையம் அமைக்க நடவடிக்கை எடுத்து 2012-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியது. ஆனால் தமிழக எம்.பிக்கள் சென்னையிலிருந்து அதிக ரயில்கள் வடஇந்திய நகரங்களுக்க இயக்கும் நோக்குடன் ராயபுரத்தில் ரயில் முனையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு தீர்வாக தமிழகத்தின் தெற்கு கடைசியில் உள்ள ரயில் நிலையமான கன்னியாகுமரி ரயில் நிலையத்தை ரயில் முனைய ரயில் நிலையமாக மாற்ற வேண்டும். இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் மதுரை, சென்னை வழியாக ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

     கன்னியாகுமரி ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்றி புதிதாக பத்து பிட்லைன்களும் சுமார் பத்து முதல் இருபது வரை காலி ரயில்பெட்டிகளை நிறுத்திவைக்கும் ஸ்டேபளிங் லைன்கள், கூடுதல் நடைமேடைகள் போர்கால நடவடிக்கையாக அமைக்க வேண்டும். இந்த வசதிகள் அமைத்தால் மட்டுமே தமிழக பயணிகள் பயன்படும் படியாக கன்னியாகுமரியிலிருந்து புதிய ரயில்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது. தமிழகதில் உள்ள ரெயில் நிலையங்களை விரிவாக்கம் செய்யும் பட்சத்தில் தமிழக பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற ரெயில்களாக மட்டுமே இயக்கபடவேண்டும். கேரளா பயணிகளின் வசதிக்காக இங்கிருந்து சுற்று பாதையில் ரெயில்களை இயக்குவதை கைவிடவேண்டும்.

இணைப்பு பெட்டி தொழிற்சாலை:
     கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் புதிய இணைப்பு பெட்டி தொழிற்சாலை அமைக்க அங்கு உள்ள அனைத்து எம்.பிக்கள் அனைவரும் இணைந்து போராடி வெற்றியும் பெற்று விட்டனர். ஆனால் தமிழகத்தில் திருச்சியில் உள்ள பொன்மலையில் ரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 25 ஆண்டுகளாகவே ரயில்வே துறையிடம் வைக்கப்பட்டுள்ளது. இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த திருச்சியில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும்.

     கேரளாவில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு என கேரளா மாநில அரசு அதிக அக்கரை எடுத்து வருகிறது. ஒவ்வொரு ரயில் பட்ஜெட்டின் ஒரு மாதத்துக்கு முன்பு கேரளா முதல்வர் ரயில்வே பட்ஜெட்டில் கேரளாவில் உள்ள கோரிக்கை மனுவை நேரடியாக ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்கின்றார்கள். தமிழக முதல்வரும் இது போன்று தமிழக ரயில்வே திட்டங்களின் கோரிக்கையை டில்லிக்கு நேரடியாக சென்று சமர்பிக்க வேண்டும் என்ற தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

     கன்னியாகுமரி – நிசாமுதீன்(புதுடில்லி) திருக்குறள் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழக பயணிகளால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பிகளுக்கும் தெரியும். இந்த பட்ஜெட்டில் தினசரி ரயிலுக்கான அறிவிப்ப வரும் என்று அனைத்து தமிழக பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. பட்ஜெடை அறிவித்த அடுத்த நாள் தமிழக எம்.பிக்கள் அனைவரும் இணைந்து கேரளா எம்.பிகளை போன்று ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து இந்த கோரிக்கை குறித்து வலியுறுத்தியிருந்தால் இரண்டாவது அறிவிப்பின் போது இந்த திருக்குறள் ரயிலை தினசரி ரயிலுக்கான அறிவிப்பு கிடைத்திருக்கும்.

     கடந்த நான்கு ரயில் பட்ஜெட்களில் தமிழகத்தல் உள்ள ஒர் ஊரை குறிவைத்து மட்டும் அதிக ரயில்கள் இயக்கப்ட்டுள்ளது. இந்த ரயில்கள் அரசியல் காரணங்களுக்காகவே இவ்வாறு அறிவிக்கப்படுகிறது. இதை போன்று தமிழகத்தில் உள்ள மற்ற ஊர்களுக்கும் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற தமிழக பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் உள்ள மற்ற எம்.பிக்களும் இது போன்று ரயில்கள் இயக்க ரயில்வே துறைக்கு அரசியல் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே இயக்கப்படும்.
--
நன்றி
எட்வர்ட் ஜெனி
கன்னியாகுமரி

0 comments:

Post a Comment