Friday, March 22, 2013

மும்பைக் கலவரம்:சுதந்திரமாக சுற்றித்திரியும் சிவசேனா தீவிரவாதிகள்! – நீதியின் ஓரவஞ்சனை!

                       22 Mar 2013 mumbai_riots_bombay_1993
 
     புதுடெல்லி:1992-ஆம் ஆண்டு டிசம்பரிலும் 1993 ஜனவரி மாதமும் மும்பை வீதிகளில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை உயிருடன் தீயில் பொசுக்கி, துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி கொலைச்செய்த சிவசேனா தீவிரவாதிகள் இன்றும் மும்பையில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.
 
     மும்பைக் குண்டுவெடிப்புக்கு காரணமே அன்று மும்பையில் நடந்த கலவரமாகும் என்று குண்டுவெடிப்பு வழக்கை விசாரணைச் செய்த சி.பி.ஐயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கலவரத்தை நடத்தியது சிவசேனாக்காரர்களும், அதற்கு தலைமை தாங்கியது பால்தாக்கரேயும் என்று மும்பைக் கலவரத்தைக் குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை கூறியது. ஆனாலும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவோ அரசுகள் தயாராகவில்லை.
 
     கலவரத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அவர்களின் நிறுவனங்களையும், சொத்துக்களையும் இழந்துவிட்டு சேரிகளில் தங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதிச் செய்தது சர்ச்சையை கிளப்பும் வேளையில் குண்டுவெடிப்புக்குக் காரணமான மும்பைகலவரம் குறித்து யாரும் வாய் அசைக்கவில்லை.
     மும்பைக் கலவரத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையின் படி 900 பேர் கொல்லப்பட்டனர். 2036 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதிகாரப்பூர்வமற்ற புள்ளிவிபரப்படி 2000க்கும் மேற்பட்டவர்கள் கலவரங்களில் கொல்லப்பட்டனர். சிவசேனாவிற்கு கலவரத்தில் பங்கு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் முஸ்லிம்களை தேடிப்பிடித்து திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் அவ்வமைப்பின் தலைவர் பால்தாக்கரே முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கியதே நூற்றுக்கணக்கான நபர்களின் உயிர் பறிபோக காரணம் என்று ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை கூறியது.
 
     ஒரு முஸ்லிம் கூட சாட்சி கூற மீதம் வைக்கக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தவர் பால்தாக்கரே. ஆனால், சாம்னாவுக்கும், அதேபோல விஷம் கக்கும் செய்திகளை வெளியிட்ட நவகால்பத்திரிகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு தயாராகவில்லை. அதேவேளையில் மஹராஷ்ட்ரா அரசின் விளம்பரங்கள் தாராளமாக இப்பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன. பால்தாக்கரேக்கு எதிராக சுண்டுவிரலை அசைக்க கூட அரசு தயாராகவில்லை. அதேவேளையில் தாக்கரே மரணித்தபோது பரிபூரணமான அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியது அரசு. சிவசேனா முன்னாள் எம்.பிக்கள் சர்போட்தார், ரமேஷ் உள்ளிட்டவர்கள் முஸ்லிம்களை கொன்றொடுக்க அழைப்பு விடுத்ததை கமிஷன் கண்டறிந்தது. ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைக்குப் பிறகு சில கண் துடைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அவை பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளாக அமைந்தன.மதுகர் சர்போட்தாரை கலவரத்தை தூண்டும் விதமாக உரையாற்றினார் என்று கூறி மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒரு ஆண்டு தண்டனை விதித்தது. ஆனால், தீர்ப்பு வெளியாகி ஒரு மணிநேரத்தில் சர்போட்தாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 2010-ஆம் ஆண்டு சர்போட்தார் மரணிக்கும் வரை சிறைக்கு வெளியேதான் வாழ்ந்தார்.
 
     கலவரத்தில் லட்சக்கணக்கான மதிப்புடைய தொழிற்சாலைகள் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மஹராஷ்ட்ரா அரசு வெறும் ரூ.4 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கியது.தனது விலைமதிக்கமுடியாத ஐந்து ஆண்டுகளையும், அரசு கஜானாவில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தையும் ஏன் வீணாக்குகின்றீர்கள்? என்று தனது அறிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொள்ளாதற்காக ஸ்ரீகிருஷ்ணா அங்கலாய்த்தார்.
 
     மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் இதற்கான பொறுப்பில் இருந்து நழுவிட முடியாது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையும் வழங்க வகைச் செய்யும் கம்யூனல் அண்ட் டார்கெட்டட் வயலன்ஸ் மசோதாவை அமல்படுத்துவோம் என்பது 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தேர்தல் வாக்குறுதியாக அமைந்தது. ஆட்சிக் கட்டிலில் ஏறி பத்தாண்டுகள் கழிந்த பிறகும் ஐ.மு அரசு இம்மசோதாவை கிடப்பில் போட்டுள்ளது.

0 comments:

Post a Comment