Thursday, March 14, 2013

அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் வெளியேற ஆப்கான் கிராம மக்கள் கோரிக்கை!

13 Mar 2013
     காபூல்:உள்ளூர் மக்களை அச்சுறுத்தும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் வெளியேற வேண்டும் என்று ஆப்கானின் வர்தக் மாகாணத்தில் உள்ள மைதான் ஷாஹர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
     அப்பாவி மக்களை கூட்டாக கைது செய்து பல மாதங்கள் சித்திரவதைச் செய்யும் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்திற்கு ஆப்கான் ராணுவமும் உதவிச் செய்வதாக இங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
     அமெரிக்க எதிர்ப்புணர்வு தீவிரமடைந்துள்ள மாகாணங்களில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறவேண்டும் என்று 2 தினங்களுக்கு முன்பாக ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் விடுத்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.
 
     வர்தக் மாகாணத்தில் ராணுவ தலைமையகத்தில் ஆப்கான் படை வீரன் சுட்டதில் நேற்று முன் தினம் 2 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர். மாகாணத்தில் இருந்து உடனடியாக வெளியேற முடியாது என்று நேட்டோ கமாண்டர் ஜோஸஃப் டன்ஃபோட் கூறினார்.
 
     அமெரிக்க ராணுவம் தாக்கினால் திருப்பித் தாக்குவோம் என்று மைதான் ஷாஹரில் வியாபாரியான மிர்ஸா கூறினார்.மூன்று மாதம் முன்பு அமெரிக்க ராணுவம் பிடித்துச் சென்ற தனது மூத்தமகன் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது என்று முஹம்மது கூறுகிறார்.
 
    அமெரிக்க ராணுவம் வெளியேறாவிட்டால் நாங்கள் இப்பகுதியில் இருந்து வெளியேறிவிடுவோம் என்று இன்னொரு வியாபாரி கூறுகிறார். தேஹ் ஆப்கானில் ஒரு மஸ்ஜிதில் இருந்து ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு கைது செய்யப்பட்ட 80க்கும் மேற்பட்ட நபர்களை இதுவரை விடுவிக்கவில்லை.

0 comments:

Post a Comment