Wednesday, March 20, 2013

மொஸாத் ஏஜெண்டிற்கு டெல்லியில் ரகசிய இடத்தை ஏற்பாடுச் செய்த ‘ரா’ – அதிர்ச்சி தகவல்!

                        20 Mar 2013 mossad
 
    புதுடெல்லி:இந்திய உளவுத்துறையான ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்(RAW) இஸ்ரேலின் ரகசிய உளவு அமைப்பான மொஸாதிற்கு நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் ரகசிய இடத்தை வழங்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
     முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலக்கட்டத்தில் இந்தியாவில் இஸ்ரேல் நடத்தும் ரகசிய நடவடிக்கைகளுக்காக மொஸாத், டெல்லியில் ‘ரா’வுக்கு சொந்தமான இரண்டு ப்ளாட்டுக்களை உபயோகித்துள்ளது. ராஜீவ் காந்தியின் அனுமதியோடு இது நடந்ததாக முன்னாள் ‘ரா’ அதிகாரிகள் உறுதிச் செய்துள்ளனர்.
 
     1987-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை ’ரா’ வின் தலைவராக பதவி வகித்த ஆன்ந்த் குமார் வர்மா இதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். ஆனந்த் சர்மா, சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களைக் குறித்து முன்னாள் ‘ரா’ அதிகாரி ஆர்.கே.யாதவ் நடத்திய 17 ஆண்டுகள் சட்டரீதியான போராட்டத்தின்போது ‘ரா’வுக்கும் மொஸாதுக்கும் இடையேயான ரகசிய உறவு குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. யாதவ் அளித்த புகாரின் மீது வர்மாவின் சட்டவிரோத சொத்துக் குவிப்புக் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
     இந்தியாவில் ரகசிய உளவுத்துறை ஏஜன்சிகள் செலவழிக்கும் தொகைக் குறித்த கணக்கு விபரங்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கவேண்டியதில்லை என்ற நிலையில் இவர்களுக்காக அரசு கஜானாவில் இருந்து செலவழிக்கப்படும் பணம் யாருடைய பாக்கெட்டிற்கு செல்கிறது என்பதை பரிசோதிக்க அமைப்பு எதுவும் இல்லை. ஆகையால்தான் ’ரா’வுக்கு அனுமதித்த பணத்தை பயன்படுத்தி வர்மா செல்வந்தராக மாறினார் என்று யாதவ் குற்றம் சாட்டுகிறார்.
 
      வர்மா ‘ரா’வின் தலைவராக பதவி வகித்த வேளையில் புதுடெல்லி ஹைலி சாலையில் கவுரி ஸதன் கட்டிடத்தில் இரண்டு ப்ளாட்டுக்களை வாங்கியது. ஃப்யூஷ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், ஹெக்டர் லீஸிங் அண்ட் ஃபினான்சிங் கம்பெனி லிமிடெட் என்று ’ரா’ உருவாக்கிய இரண்டு போலி கம்பெனிகளின் பெயரில் ப்ளாட் வாங்கப்பட்டது. ’ரா’ முன்னாள் ஸ்பெஷல் செயலாளர் வி.பாலச்சந்திரன், முன்னாள் கூடுதல் செயலாளர் பி.ராமன் ஆகிய அதிகாரிகள் இந்த போலி நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆவர்.பி.ராமன் ஓய்வு பெற்ற பிறகு வலதுசாரி கொள்கை அடிப்படையிலான பாதுகாப்பு விளக்கங்களை அளிக்கும் நிபுணராக மாறிவிட்டார்.
புதுடெல்லியில் ‘ரா’ இரண்டு போலி கம்பெனிகளின் பெயரில் வாங்கிய ப்ளாட்டுக்களை இந்தியாவில் மொஸாத் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கியுள்ளது. அன்றைய காலக்கட்டத்தில் இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லை என்பதால் உளவாளி இஸ்ரேல் குடிமகன் என்ற உண்மையை மூடி மறைத்து இங்கு வசிக்கச் செய்துள்ளனர். மொஸாத் ஏஜண்ட் வசம் அர்ஜெண்டினா நாட்டு பாஸ்போர்ட் இருந்துள்ளது. 1989-ஆம் ஆண்டு முதல் 1992-ஆம் ஆண்டு வரை இந்த நபர் மொஸாதிற்காக இந்தியாவில் இயங்கியுள்ளார். இக்காலக்கட்டத்தில் பல்வேறு ரகசிய நடவடிக்கைகளில் இந்த நபர் பங்கேற்றுள்ளார். 1991-ஆம் ஆண்டு கஷ்மீரில் ஜே.கே.எல்.எஃப் கடத்திச் சென்ற இஸ்ரேலிய குடிமகனை, ஜே.கே.எல்.எஃபுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீட்டவர் இந்த உளவாளி ஆவார்.
 
     புதுடெல்லியில் ’ரா’ வாங்கிய இரண்டு ப்ளாட்டுக்களும் போலி கம்பெனிகளின் பெயரில் தற்போதும் உள்ளன. மத்திய அரசின் கஜானாவில் இருந்து வழங்கப்படும் நிதி போலி கம்பெனிகளின் பெயரால் பல ‘ரா’ அதிகாரிகளுக்கு செல்வதாக யாதவ் கூறுகிறார். தற்போது முன்னாள் ‘ரா’ தலைமை அதிகாரி வர்மாவுக்கு 100 கோடி சொத்துள்ளதாக யாதவ் குற்றம் சாட்டுகிறார். 1996-ஆம் ஆண்டு வர்மாவின் சட்டவிரோத சொத்துக் குவிப்புக் குறித்து விசாரணை நடத்தக்கோரி யாதவ் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடிச் செய்தது. ஆனால், 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வர்மாவுக்கு எதிரான கூடுதல் ஆதாரங்களை பெற்று 2009-ஆம்ஆண்டு மீண்டும் நீதிமன்றத்தை யாதவ் அணுகினார். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்றுக்கொண்டது. அதேவேளையில் இதுக் குறித்து பதிலளிக்க வர்மா மறுத்துவிட்டார்.

0 comments:

Post a Comment